நியூசிலாந்து குடிமக்கள் அனைவருக்கும் போட தேவையான மேலதிக பைசர்-பயோஎன்டெக் தடுப்பூசிகளை வாங்கவுள்ளதாக பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.
இதுவரை நாட்டுக்கு வந்துள்ள தடுப்பூசிகளுக்கு மேலதிகமாக 8.5 மில்லியன் பைசர்-பயோஎன்டெக் தடுப்பூசிகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் அரசாங்கம் கையெழுத்திட்டுள்ளது. இவை 4 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு போதுமானது.
இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் மில்லியன் கணக்கான தடுப்பூசிகள் நாட்டுக்கு வந்து சேரும் எனவும் பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் குறிப்பிட்டார்.
ஏற்கனவே பெற்றுக்கொண்டவற்றுடன், ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள தடுப்பூசிகளையும் சேர்த்து நாடு 10 மில்லியன் தடுப்பூசிகளைப் பெறும். இதன்மூலம் 5 மில்லியன் மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி போட முடியும் எனவும் அவா் கூறினார். கொரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதில் பைசர் தடுப்பூசி 95 வீதம் பயனுள்ளது என ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளதையடுத்தே முழுமையாக அந்தத் தடுப்பூசிகளைப் பெற முடிவு செய்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
நியூசிலாந்து கடந்த மாதம் பைசர்-பயோஎன்டெக் கோவிட் -19 தடுப்பூசிகளை போடத் தொடங்கிது. இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து மக்களுக்கு தடுப்பூசி போட அந்நாடு எதிர்பார்த்துள்ளது.
நியூசிலாந்தில் இதுவரை 2,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன், 26 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. ஏனைய வளர்ச்சியடைந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைந்த தொகையாகும்.
தீவிர கண்காணிப்பு, எல்லை மூடல், சமூக முடக்கல் மற்றும் சிறப்பான தடமறிதல் மற்றும் தனிமைப்படுத்தல் முயற்சிகளால் நியூசிலாந்து தொடர்ந்து தொற்று நோயை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. நியூசிலாந்தின் மிகப் பெரிய நகரமான ஆக்லாந்தில் இங்கிலாந்தில் வேகமாகக் பரவும் புதிய வகை வைரஸ் தொற்று நோயாளிகள் கண்டறியப்பட்டதை அடுத்து அந்நகரம் முழுவதும் ஒரு வாரத்துக்கு மேலாக முடக்கப்பட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமையே அந்நகரில் சமூக முடக்கல் தளர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Category: உலகம், புதிது
Tags: நியூசிலாந்து